Wednesday 7 November 2012

ஒரேயொரு முத்தம்

அன்று கல்லூரி வாழ்க்கை முடிவுக்குவரும் கடைசிநாள். அவர்கள் இருவரும் காதலர்கள்தான் என்றாலும் ஒருவரையொருவர் இதுவரை தொட்டுக்கொண்டதேயில்லை. அவளுக்கு அவர்களின் வீட்டில் மிகப்பெரிய பணக்கார மாப்பிள்ளையையும் பார்த்தாகிவிட்டது. அவளால் மறுத்துவிட முடியவில்லை. சூழ்நிலை. இரண்டுமணிநேரங்கள் மனம்விட்டு பேசிக்கொண்டார்கள். அவன் காதலுக்குப் பரிசாக ஒரேயொரு முத்தத்தினைப் பரிசாகக் கேட்டான். அவளால் அதற்கு ஒத்துப்போகக்கூட மனம் வரவில்லை. கடைசியில் இனிசந்திப்பதில்லை என முடிவெடுத்துப் பிரிந்து சென்றனர். துவங்கும்போழுது அவளின் திருமண வாழ்வு இனிமையாய்த்தான் இருந்தது. மனத்தில்மட்டும் ஏதோ ஒரு குறையுடன் இருப்பதாகவே அவளுக்கு இருந்தது. மணவாழ்க்கையை பழையவற்றை முடிவுக்குக் கொண்டுவந்து புதிதாகத்தான் வாழ்வதுபோல் துவங்கினாள். சூல் அமையப்பெற்றாள். சிறகெடுத்த வானில் பறப்பதுபோல் உணர்ந்தாள். அவள் வாழ்வுக்கும் ஒரு அர்த்தம் இருந்ததை விரும்பினாள். என்ன பெயர் வைக்கவேண்டும் என்று மனத்தைக் கசக்கி சில பெயர்களை குறித்துவைத்துக் கொண்டாள். அதில் ஆண் மற்றும் பெண் பெயர்களும் இருந்தன. சந்தோஷ மனநிலையில் வானத்தைப் பார்த்தும் தென்றலுடன் பேசியும் மழையுடன் ஆடியும் கவிதைகள் பல வரைந்தாள். உலகத்தை மறந்தாள். இன்பத்தில் குளித்தாள். உலகமே தனக்காக மலர்ந்து கிடந்ததை அனுபவித்தாள். கணவனின் அன்பை அணுவணுவாக ரசித்தாள்.
குழந்தையின் வளர்ச்சியினை கண்டுகண்டு பூரிப்பாய் உணர்ந்தாள். பிறந்த ஆண்குழந்தைக்கு உடனேயே அருண் எனப் பெயரிட்டு மகிழ்ந்தாள். அப்பொழுதுதான் அந்தப்பேரிடி அவளின் தலையை இடித்து உடைத்தது. ரத்தம் சோதனையில் அவளுக்கு எய்ட்ஸ் இருப்பது தெரியவந்தது. குழந்தைக்கும் இருந்தது. அந்தப்பிஞ்சி முகம் பார்த்து அதன் சிரிப்பில் அழுதாள். விஷயம் தெரிந்தவுடன் கணவன் தூக்குமாட்டி அன்றிரவே இறந்துவிட்டான். ஒருநாளுக்குள்தான் எத்தனைஎத்தனை துன்பங்கள். துயரங்கள். வேதனைகள். விபரீத விளைவுகள். ஆறுதல் சொல்லக்கூட எந்த உறவுகளுக்கும் துணிவில்லை. அருகில்கூட யாருக்கும் வரவிருப்பமில்லை.
வீட்டிற்க்குச் சென்றபின் விட்டத்தைப்பார்த்துக் கொண்டே நேரம் சென்றது. அழுவது முழுவதும் நின்றடங்கியது. பட்டென்று அவன், காதலன் பிரிவின்போழுது கேட்ட முத்தம் கண்ணினுள் திரையில் ஓடியது. அவனை சந்திக்க வேண்டும்போல் மனம் கெஞ்சியது. எல்லா திசைகளிலும் விசாரித்து ஒருவழியாக அவன் இருக்குமிடம் கண்டுகொண்டாள். அவன் வீட்டின் நம்பருக்கு போன் செய்தாள். மறுமுனையில் அவன்தான் போனை எடுத்தான். இவளால் ஒன்றும் பேசமுடியவில்லை.
அவளின் நிலை நண்பர்களின் மூலமாக அவளின் பழைய காதலனுக்குத் தெரியவந்தது. இப்பொழுது அவளின் வீட்டுக்கு அவன் போன் செய்தான். அவள்தான் எடுத்தாள். சில நிமிடங்கள் ஒருவரும் ஒன்றும் பேசிட முடியவில்லை. அவள்தான் முதலில் இப்பொழுது பேசினாள். அவனின் உடல்நலம் விசாரித்தாள். அவன் இன்னும் பேசவில்லை. அழுதுவிட்டான். அவள் எங்கு இருக்கிறாள் என்பதைக் கேட்டுக்கொண்டு அவளைக்காண கிளம்பினான். எப்படியும் நான்கு மணிநேரம் ஆகும்.
அவள் வீட்டையடையும்பொழுது மாலை இருட்டத்துவங்கிவிட்டது. உள்ளே சென்று அவள் பெயரையழைத்து கூப்பிட்டான். படுக்கையறையிலிருந்து சிறிய முனகல் சத்தம் கேட்டதும் அந்தத்திசை நோக்கி ஓடினான். படுக்கையில் அவள் கிடந்தாள். அவள் விஷம் அருந்தியிருந்தாள். குழந்தை சிரித்துக்கொண்டு கையையும் காலையும் ஆட்டிக்கொண்டு கிடந்தது. அவளை அவனின் மடியினில் ஏந்திக்கொண்டு திட்டினான். அவள் சொன்னாள், எனக்கு ஒரு முத்தமிடு அதுவே என்னின் கடைசி ஆசை. உன்காதலுக்கு அதையே பரிசாகத்தருகிறேன் என்றாள். அவன் அதைக் கவனிக்காமல் அவளைத் தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினான். அவள் எடுத்த வாயில் அவனின் சட்டையை முழுவதுமாய் பரவி நாறடித்தது. அவன் எதையுமே பொருட்படுத்தாமல் ஓடினான்.
அவள் காப்பாற்றப்பட்டாள். பின்னர் அவளை அவனின் ஊருக்கு அழைத்துச் சென்று கோவிலில் மாலைமாற்றி திருமணம் செய்துகொண்டான்.
அது ஒரு இரவு. படுக்கையறையில் அவனின் மடியினில் அவள். அவன் முத்தமிட வெட்கப்பட்டதால் , அவள் அவனை ஆசைதீர முத்தமிட்டாள். கண்ணுற்ற குழந்தை கைகொட்டிச் சிரித்தது.

No comments:

Post a Comment