Friday 20 January 2012

மாறிவிடுகிறேன் அன்பிற்காக


விலையாகிப்போன தென்றல்
வினையாகிப்போன காவியக்காதல்,

விளையாடித் துயிலும் வஞ்சம்,
விழித்துக்கிடக்கும் மலர் மஞ்சம்,

கொசுவின் இலவச மருத்துவ உதவி,
இணைய மறுக்கும் நினைவு உறவு,

தொலைத்த நித்திரையின் கடை ஓர
விழித்திரையில் வீணாய்ப்போன விண்மீன்கள்.

நட்டநடுவினில் வட்டநிலா, உடல்
பட்டஇடமெங்கும் ஒலியால் சுட்டநிலா.

சித்திரத்தின் வன்மை வக்கிரத்தால்
சிறியதாய்க் குத்தின வலி முத்திரைகள்.

இவைகள்தாம் இன்றைய நிலையின்
குன்றிய இரவின் பனிபடர்ந்த பயணப்பாதை.

 சேலையின் கட்டின விதம் உன்னுடலுக்கு 

அழகாக பொருந்தி இருந்ததினால்,

அழகில்லாத அதன் நிறமும், வடிவமைப்பும்
வெளித்தோன்ற முடியவில்லை.

சிதறின உன் ஒற்றைச் சிரிப்பினில்
சிதைந்து போயின என் சிந்தனைகள்.

வானமகள் நாணிப் பூனிய மேகஉடை
சிரித்ததில் சிதறிய சில்லென்ற மழை.

வெளிவந்த வார்த்தைகளை வீசியெறியும்
வெந்துநொந்த பைத்தியம்போல்

வந்து விழுந்த கவிதைகள் வழுக்கி,
வீழ்ந்துகிடக்கிறேன் வழியறியமுடியாமல்.

முதுகினில் குத்திநிற்கின்றாயா, இல்லை
முகம்புதைத்து முத்தம் பதிக்கின்றாயா,

புரியவே முடியவில்லை உன்பாதை,
என் மழுங்கிய மூளைக்கு எட்டினவரை.

 நட்பின் இலக்கணம் புரியாதவர்களிடமே, 

நட்பு பாராட்டியிருந்திருக்கின்றேன்.

அதனாலேயே காதல் உருவான உன்மேல்
நட்பினை உணர முன்வரவில்லை.

இது ஒரு அறிவுறுத்தலா? இல்லை,
உண்மை நினைவுறுத்தலா? புரியவில்லை.

ஆனாலும் எதையுமே எதிர்பார்க்காத
என்மனம் நட்பினையும் ஆராதிக்கின்றது.

மொத்தத்தில், கொடுக்கப்பட்ட பரிசு,
அன்பினை மையமாக்கி நிற்பதினால்,

ஏற்றுக்கொள்கிறேன் பிரித்துணரமுடியா
காதலை வீழ்த்திவிடுகிறேன் விண்ணைவிட்டே! 

கொடுமையானதோ காதல்


ஏதோ உன்னில் நான் எதிர்பார்க்கிறேன்,
என்பதுமட்டும் பிரிந்து தெரிகிறது.

ஆனாலும் அறுதியிட்டு உணரவில்லை,
அந்தி பொழுது அசைந்தாடி சாயும்வரை.

தினமும் உன் வலைப்பக்கங்களினுள்
வந்து சென்றுகொண்டே இருக்கிறேன்,

சரியான காரணம் அறியாமலே, புரியாமலே,
ஒவ்வொரு நாளும் உதிக்கும் ஆதவன்போல்.

சூரியனின் நியமப்பாதையினை
மாற்றிட யாருக்கும் உரிமையில்லை.

என்ன நேர்ந்தது என் நிஜங்களுக்கு,
துருப்பிடித்துக் குழப்பிய நிகழ்காலம்.

போகவேண்டிய இடம் தெரியாமல்
புலம்பெயர்ந்த செல்லும் விண் கற்கள்போல,

பயணம் இனிமையானதுதான் ஆனாலும்
புரியமுடியாத புதிராய் இலக்கு இல்லாமல்.

ஒருவேளை உன் எழுத்தின் படைப்புகளை
ஒவ்வொருநாளும் ஏங்கிக்கிடக்கிறதோ?

இத்தனைக் கொடுமையானதோ
என்மீது நீகொண்ட இனியகாதல்?

 உன்னையே முழுநேரமும் சுற்றினேன். 

உன் நினைவுகளிலேயே மூழ்கினேன்.

களைப்பாய் தவிக்கும் மனம்
தூக்கமிழந்த கண்களின் தவிப்பு.

ஆனாலும்

முதுகில் குத்தியிருக்கவேண்டாம்,
முகத்தில் அடித்திருந்திருக்கலாம்.

இரவினைப் பகலாக்கிவிட்டும்
பகலினை இரவாக்கிவிட்டும்,

அப்படியென்ன வேண்டும் உனக்கு,
என் முகத்தினில் கரி பூசுவதினைத்தவிர.

 விழி நனைந்த கவிதைப் பக்கம் 

விளையாட இங்கு துணையில்லை.

சுகம்நிறைந்த ஆன்மாவின் அகமாக,
பஞ்சினால் நெய்யப்பட்ட துணியில்

கனிந்த காதல் நூல்கொண்டு
நீ தைத்துக்கொடுத்த ஆடையின்

அளவு மாறிவிட்டபடியால்
அணியமுடியாமல் ஆகிவிட்டது.

முதல் பின்னல் இறுகி முடிந்ததால்
இணைந்த இணைப்பை முனைந்து,

பிரித்துத்தைக்கவும் முடியாமல்
விட்டுஎரியவும் வழியில்லாமல்

செய்வதறியாது திகைத்து நிற்கிறேன்
தொட்டுவிடத் துடிக்கும் வானம்போல். 

காதல்பரிசு எங்கே?


தங்குதடையின்றி தொடுக்கப்பட்ட
என் உன்மீதான கேள்விக்கணைகள்,

வந்துநின்றபின் உன் அழகிலும்
அரவணைத்த அன்பிலும் மயங்கி, மதிமறந்து

பதில் பெறமுடியாமலே உணராமுடியாமலே
உன் காலடியில் வீழ்ந்துவிட்டதுபோலும்.

காத்திருந்து காத்திருந்து கவனம் சிதைந்து
விழி வழுவிழந்து நிலைமறந்து கிடக்கிறேன்.

கள்ளம் நிறைந்து, பள்ளம் விழுந்து,
லஞ்சம்ஏறி, துருவேறின தங்கமாய்

மூடுபனி வெண்கூந்தல் பெற்று
வாடிநிற்கும் பாரதமாதாவைப் போல,

செய்வதறியாது திகைத்து நிற்கிறேன்.
புதுவருடமாம் 2012 கண்திறக்குமா, பார்ப்போம்.

 கடந்துசென்ற காலப் பாதையினைத் 

திரும்பிப்பார்க்கலாம், திருத்திக்கொள்ளலாம்.

ஆயினும் மறுபடியும் மகிழ்வுடன்
அதில் நீந்திக்கிடக்க முடிந்ததில்லை.

உறவுக் கிணற்றில் வீழ்தல் எண்ணி,
காதல்க் கடலினுள் கவிழ்ந்து கிடக்கின்றேன்.

உடல் உயிர் கொள்ளல் எனல்,
ஒரு ஒருங்கிணைந்த காந்தக்குவியல்.

உன்மீது கொண்ட காதல் தனல்,
குறிப்பது உயிர்ப்புடன் இருத்தலை.

பருவமடைந்த பட்டுப்புழு எச்சியினைக்
கொண்டு தனக்குள்ளேயே அழகிய,

கூடமைத்துக்கொண்டு சுகமாய்,
இறைவேண்டி யாகம் செய்திடல்போல்,

நம்மைச் சுற்றி அமைந்துகொண்ட
காதல் கூடு சுகமாயே நம்மைக் காக்கின்றது.

இருப்புநிலையே அழகிய கருமை,
அதுவே வெளித்தள்ளிய வெண்மை,

சூரியத்தேர் பூட்டப்பட்ட ஏழுகுதிரைகள்,
வெண்மை பிரித்த நிறமாலை நிறங்கள்.

ஒன்பது நிறங்களையும், நவருசிகளையும்,
நவரசங்களையும் தனக்குள் பூசிநிற்கும்

நவமணியே, கோபவசனக் கற்றைகள்,
விழிவழி காமப்பார்வை வித்தைகள்,

தாங்கமுடியவில்லை, தணியாத
காதல்தாகத்தால் ஏங்கமுடியவில்லை.

பரிசுப்பொருள் அறியஎண்ணி. 

காதல் உண்மைவடிவானது


கோடானுகோடி சூரியன்கள் நினைப்பினும்
இருட்டினை ஒழித்துவிட முடிவதில்லை.

இருட்டு, இந்த நிலையான மொத்தத்திற்கும்
மறைக்கமுடியாத நிதர்சன நிரந்தரம்.

ஓராயிரம் காதல்கனைகள் எறியப்பட்டாலும்
மனம் ஒப்பி ஒளிந்துகிடப்பது ஒர்காதல் மட்டுமே.

உண்மைக் காதல் ஒருதலையாயினும்
இத் தருதலையின் மனம் மருதழிவதில்லை.

மலர்ந்து நிற்கும் மலர் வாடமுடியுமே தவிர
மலர்ந்தபின் மறுத்துநிற்க அனுமதியில்லை.

காதல் வந்த அரிச்சுவடு புரிவதில்லை,
அணைந்தபின் அமைதி திரும்புவதில்லை.

பால்யத்தில் ஆடியதென்ன, பாடியதென்ன,
தலைவணங்காமல் தறிகெட்டு ஓடியதென்ன,

துள்ளிவரும் புள்ளிமேவா மான்களுடன்
கிள்ளியாடும் துணிந்த இளமை துள்ளலென்ன,

தனிமையும் இனிமையாய், தவழ்ந்து
தவறிவிழும் தண்ணீர் தோகையும் குளுமையாய்,

காதலின் தூசு கண்களில் ஒட்டும்முன்
கபடமில்லா, கவலையில்லா வாழ்க்கை.

பனி உமிழ்ந்த முத்தரசம் முத்தாகிபோய்,
கழுத்து மாலையில் முகவரியின்றித் தவிக்க,

உள் விழுந்த உன் ஒரு விழிப்பார்வை
ஓராயிரம் இன்பக் காதலைச் சுமந்துநிற்க,

மங்கைமடி வீழ்ந்தவன் எழமுடியவில்லை,
மறுபடியும் மறுபடியும் இரைந்து கிடக்கிறேன் 

Monday 2 January 2012

நானும் நீயும் நாமாக

பணம் பார்த்து மணம் கொள்ளத்தேவையில்லை.
இனம் பார்த்து மனம் வாழ்வதில்லை.

மனம் பார்த்து காதல் வளர்வதில்லை.
மணம் பார்த்து மலர் மலர்வதில்லை.

சினம் பார்த்து பின் இனம் நிற்பதில்லை.
தினம் பார்த்து பணம் வருவதில்லை.

காதல் பார்த்து காமம் செல்வதில்லை.
மலர் பார்த்து மஞ்சம் கொள்வதில்லை.

குணம் பார்த்து சினம் வெல்வதில்லை.
சனம் பார்த்து தினம் புலர்வதில்லை.

காமம் பார்த்து நாணம் நடுங்குவதில்லை.
மஞ்சம் பார்த்து நெஞ்சம் நேசிப்பதில்லை.

நட்பு பார்த்து குணம் கெடுவதில்லை.
ஏழ்மை பார்த்து சனம் மகிழ்வதில்லை.

நாணம் பார்த்து மானம் போவதில்லை.
நெஞ்சம் பார்த்து வஞ்சம் தீர்வதில்லை.

கேடு பார்த்து நட்பு வளர்வதில்லை.
புகழ் பார்த்து ஏழ்மை சிரிப்பதில்லை.

மானம் பார்த்து வாழ்வு சிறப்பதில்லை.
வஞ்சம் பார்த்து தாய்மை துடிப்பதில்லை.

சுற்றம் பார்த்து கேடு கெடுவதில்லை.
மன்றம் பார்த்து புகழ் வீழ்வதில்லை.

வாழ்வு பார்த்து நானும் வரவில்லை.
தாய்மை பார்த்து நாமும் பழகவில்லை.