Monday 30 July 2012

அய்யாப்பா என்ற தனிப்பிறவி

அவரின் வாழ்க்கையின் இந்த ஒரு நிலையினை இன்றுவரை என்னால் கற்பனை செய்துகூட பார்க்கமுடிந்ததில்லை.
ஒரு ஏழை தன் வாழ்க்கையில் பணக்காரன் ஆகி மறுபடியும் ஏழ்மைக்கு தாழ்ந்துவிடலாம். அது ஒரு பிரச்சனையுமில்லை. ஆனால் ராஜவாழ்க்கை வாழ்ந்தவன் ஒருவன் ஏழ்மையினை சுவைத்திடல் கூடாது. அது கொடுமை.
கொஞ்சமாவது நினைத்துப்பாருங்கள், பள்ளி செல்ல குதிரைபூட்டிய சாரட் வண்டிதான், தினமும் பட்டுச் சொக்காய்தான், இப்படியொரு ஆர்ப்பாட்டமான ராஜவாழ்க்கை 13 வயதில். அதாவது ரெண்டுங்கெட்டான் வயது. அப்பொழுது ஒருநாள் அவரின் அம்மா (பச்சையாத்தா) சொன்னாள், நாம் நாளையிலிருந்து வேறு வீட்டுக்கு சென்றுவிடவேண்டும் மற்றும் இனி பள்ளிக்கு நடந்துதான் செல்லவேண்டும்.
எப்படி இருந்திருக்கும் அந்தவயதில் அவனுக்கு. முந்தின நாள் ராஜா, மறுநாள், இன்று ஆண்டி. அதன்பின் அவரின் மனம், 80 வயதுவரை அதனினால் ஏற்பட்ட வடுவினை மறக்கத்தயாரில்லை.
இப்படியான என் அய்யாப்பாவின் வாழ்வு, எந்த எதிரிக்கும்கூட அமைந்துவிடக்கூடாது என்பது என் பிரார்த்தனை.
45 வது வயதில் வந்த நோயினால் இறந்துவிடுவோமோ என்ற அஞ்சியேதான் தன் மூத்தமகனுக்கு திருமணம் முடித்துவைத்தார்.
யாரிடமும் தேவையில்லாமல் பேசமாட்டார். முகம், பார்க்க சிடுமூஞ்சி போல தோன்றும், கோபம் விடுக்கென்று கொப்பளிக்கும். ஆனாலும் ஆழ்மனத்தில் அவர் ஒரு ஏக்கமுள்ள அமைதிமனிதன், குழந்தை. என் அய்யாம்மாவுக்கு அது தெரிந்தேயிருந்தது.
காலை 4 மணிக்கே விழுத்துவிடுவார். பலசரக்குக் கடைக்கு சென்றுவிடுவார். வீட்டிலிருக்கும் சமயம் அவரிருக்கும் இடத்திற்கு அவர் முன் யாரும் நின்றதில்லை. அவர் அடிமைபோல் இருந்தது அவரின் 2 ஆம் மகனிடம் மட்டும்தான். நேர்மை, சொன்னசொல் மாறாமை, நேரம் தவறாமை, நடப்புகளை உணரும் தன்மை, இதுதான் அவர். அவரின் ஒரேயொரு முடிவு மட்டுமே எனக்கு ஒப்புதலில்லை (என் தாயின் நகைகளை திருப்பித்தர நகை தருவதற்க்குப்பதில் பணம் கொடுப்பதாக சொன்னார்). அவருக்கும் என் தாயினை எந்த சந்தர்பத்திலும் பிடித்ததில்லை.
என் அய்யாம்மா இறந்ததினை அவரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. என்னிடம் இப்பொழுது மிகவும் அன்புடன் இருப்பார். வெளியே எங்கேயாயினும் செல்லவிரும்பினால் என்னையே அழைத்துச் செல்வார்.
நல்ல முருக பக்தர். திருச்செந்தூருக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை செல்லவில்லைஎன்றால், மனம் இருப்புக்கொள்ளமாட்டார். விடியலில் புறப்பட்டுச் சென்றவுடன் ஒரு சிங்கிள் ரூம் போடுவார். பேரனுக்குக் கடலில் குளிக்க மிகவும் பிடிக்கும் என்பதால் கடலில் குளிப்பார். அவன் மூன்று மணிநேரம் கடலில் ஆட்டம்போடுவதை தூரத்தில் இருக்கும் ஒரு திண்டில் அமர்ந்து கண்கொட்டாமல் ரசிப்பார். பின்னர் அருமையான இறைதரிசனம் முடித்து திவ்வியமாக இரண்டு இட்டிலி உண்பார். இப்படியே மறுநாளும் தொடரும். இப்படி ஒரு 15 முறையாவது அவருடன் அவன் சென்றிருப்பான்.
சிலநேரம் வீட்டில் திடீரென்று அவனைக்கத்தி அழைப்பார். தன் வாழ்க்கையின் சிறந்த, இன்பமான, விரும்பிய நினைவுகளை அவனிடம் சொல்லி ஆணந்திபார். இப்பொழுது சிலநேரங்களில் சிறுகுழந்தையினைப்போல அழவும் செய்வார். விளக்கம் சொல்லமாட்டார். வீட்டிற்குள் என் அல்லது பாலனின் கையைப் பிடித்துக்கொண்டுதான் நடப்பார். பின்னர் ஒருநாள் தானாக பாத்ரூம் சென்று கீழே விழுந்துவிட்டார். கால் முறிந்துவிட்டது. நடக்கமுடியவில்லை. பகலில் பாலன் பணிவிடை செய்வான். இரவில் நான். மற்றவைகளுக்கு அம்மா.
அவர் தன் பழைய வாழ்க்கையில் இனிப்பு என்ற ஒரு சுவையை அறிந்திருக்கவில்லை. காப்பிக்குகூட கசப்பாய்த்தான் சாப்பிடுவார். ஒருநாள் இரவு 2 மணிக்கு மிட்டாய் வேண்டுமென்று கேட்டார். கொடுக்கப்பட்டது.
ஒவ்வொருநாள் இரவும் இது நடந்தது. திடீரென ஒருநாள் படுக்கைப்புண் வந்துவிட்டது. மகன்கள் அதைத்தடுப்பதற்குரிய ஒரு படுக்கையை வாங்கிக்கொடுத்திருக்கலாம். மற்றும் வெளியே அவர் செல்ல ஒரு தள்ளும் சேர் ஏற்பாடு செய்திருக்கலாம். செய்யவில்லை, அப்படியெல்லாம் நினைத்துக்கொண்டிருக்க முடிவதில்லை யாருக்கும். அவரவர் குடும்பம் அவர்களுக்கு. டிவி வந்திருந்த பொழுது அது. டிவி பார்க்கும் ஆசையும் அவருக்கு இருந்தது. தலையைச் சாய்த்துத்திருப்பி கவனிப்பார். கண்ணுக்குத் தெரியாது. அந்த சமயம் அந்தளவுக்கு வசதிவாய்ப்புகள் மகன்களுக்கு இருந்தது. செய்யவில்லை.
டாக்டர் புண் வந்ததால் மிட்டாய் சாப்பிடுவதை நிறுத்தச் சொல்லியிருந்தார். ஓர் இரவு நான் மிட்டாய் கொடுக்கமுடியாது என்று சொல்லி, பின்னர் கொடுத்துவிட்டேன். அதை அவர் குழந்தைகள் அவரைச் சந்திக்க வந்தபொழுதெல்லாம் சொல்லித்தீர்த்தார்.
ஒருநாள் டாக்டர் பல்ஸ் குறைந்ததை உணர்ந்து ஒருநாள் கூட தாங்காது என்றார். அவரை உடனே ஒரு கார் பிடித்து சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர் மகன்கள், அவரின் இறப்பை எதிர்நோக்கி. ஊர் எல்லையைத் தொடும் சமயம் அவர் எழுந்து உட்கார்ந்தேவிட்டார். அவருக்கு இறப்பதற்கு பயம் இருந்ததில்லை. ஆனால் அவருக்கு இறக்க விருப்பமில்லை கடைசிவரை. கொண்டுசென்ற மகன்களுக்கோ கோபம். அது அவர்களின் வார்த்தைகளில் நன்றாகவே வெளிப்பட்டது. தந்தை பிழைத்துவிட்டதில் எந்த மகனுக்கும் சந்தோசமில்லை.
இப்படியொரு வாழ்க்கையும் எவருக்கும் அமைந்துவிடக்கூடாது என்பதுவும் என் விருப்பம்.
அதன் பின் அவர் ஆறு மாதங்கள் வரை இறந்த வாழ்க்கை வாழ்ந்தார். அப்பொழுதும் அவர் எனக்கும் பாலனுக்கும் மட்டுமே நண்பர்களாய் இருந்தார்.
அவர் இறந்த பொழுது, நான் அவரின் அருகினிலில்லை. மாலையில் அவர் ஊருக்குச் சென்றார். மறுநாள் காலையில் ஒரே தலைவலி எனக்கு. இதுநாள்வரை அப்படியொரு தலைவலி எனக்கு வந்ததேயில்லை. ஒரு பதினோரு மணியளவில் பட்டென தலைவலியில்லை. மறைந்துவிட்டிருந்தது. ஆனால் அந்த போன் வந்தது, அவரின் இறந்த செய்தியினை ஏற்றிக்கொண்டு.
மாமனிதர் அவர்.

Wednesday 18 July 2012

அய்யாம்மா

என் வாழ்க்கையில் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாத விஷயம் இது ஒன்று.
என் சித்தப்பா என் அயாம்மாவின் கடைசிக் குழந்தை. அதாவது எனக்கு ஒரு வயது கம்மி.
என் அய்யாம்மாவுக்கு 12 குழந்தைகள்.
ஒரு மூத்த பேரன் என்று எனக்குக் கிடைக்கவேண்டிய அன்பு என் அய்யாம்மா மற்றும் அப்பாவிடமிருந்து (எங்களூரில், அய்யாவைப்பெற்றவரை அப்பா என்றுதான் அழைப்பார்கள், உண்மையில் அய்யாப்பா) எனக்கு கிடைத்ததேயில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

என் அய்யாம்மாவும் அப்பாவும் சண்டையிட்டு, கருத்து வேற்றுமையுடன் இருந்து என் வாழ்நாளில் நான் பார்த்ததேயில்லை.
அதுபோல அவர்கள் உறங்கியும் பார்த்ததில்லை.
வீட்டில் நான்கு பசுக்கள், இருபது கோழிகள் ஆறு வான்கோழிகள், அதனால் பால் விற்பனை, முட்டை விற்பனை எல்லாம் நடந்துகொண்டிருக்கும்.
நாங்கள் எங்களூருக்கு கோடைவிடுமுறை இருமாதங்கள் முழுமையாய் சென்று களிப்போம்.
எங்களின் வேலை, கறந்தபாலைக் குடிப்பது, இட்டவுடன் பச்சை முட்டைகளை உடைத்துக் குடிப்பது, இவைகள் முக்கியமாக அடங்கும். ஒருநாள் காலையில் சாப்பிட உட்கார்ந்ததும், முட்டை தோசை வேண்டுமா என்று கேட்டார்கள். மூன்று முட்டை தோசைகள் சாப்பிட்டாயிற்று. வழக்கம் என்னவென்றால் பேத்திகளுக்கு (சித்தியின் வழி தங்கைகள்) முட்டையே கொடுப்பதில்லை. கொடுத்தாலும் ஒன்றேயொன்று மூன்று மாதங்களுக்கொருமுறை. இப்பொழுது பிரச்னை என்னவெனில் அவன் நான்காவது முட்டை கேட்டான். அவர்களால் கொடுக்காமலும் இருக்கமுடியாது, மூத்த பேரனாயிற்றே! கொடுத்தால் சித்தி ஏதும் சொல்லிவிடவும் கூடாது. அடுத்து ஐந்தாவது முட்டையைக் கேட்டபொழுது ஒருமாதிரியான கோபச் சிணுங்கள் சிணுங்கிவிட்டு (சந்தோசம்தான் ஆனாலும் வெளிக்காட்டமுடியாது.) சொன்னார்கள் ஜாடையாக, சித்தியின் காதுகளில் விழும்படியாக, "அவங்க அம்மா நாலு கோழிய கொடுத்துவிட்டிருக்காங்கள்ள அதான். ஒம்பிள்ளைக்கும் ஒரு முட்டைய ஊத்திக்கொடு." என்று.

பம்பரம் சுழல்வதைப் பார்த்திருக்கின்றீர்களா! பட்டாசில் தரைச்சக்கரம், பற்றவைத்துவுடன் சிறிதாகச் சுழலத்துவங்கி பின் அப்படியே மேலே பறந்துசெல்லத் துடிப்பதுபோல் சுழலும். அப்படியாக வேலை செய்வார்கள் என் அய்யாம்மா. அந்தக்காலத்தில் எந்த மிக்சி போன்ற உபகரணங்களும் நடைமுறையில் இருந்ததில்லை.
காலையில் எல்லோருக்கும் எழும்பொழுது காப்பி போட்டுட்டு வைத்துக்கொண்டு காத்திருப்பார், பின் சட்னியரைத்து காலையுணவு தயார் செய்வது, மாடு, கோழிகளைக் கவனிப்பது, மதிய உணவு செய்து முடிப்பது, மாட்டுக்கு பருத்திவிதை புண்ணாக்கு உணவை தாயார் செய்வது, மாவாட்டுவது, மாலை மார்கெட் சென்று காய்கறிகள் வாங்கிவருவது, எல்லோரும் பள்ளிசென்று வந்ததும் அவர்களைக் கவனிப்பது, இதனிடையில் கணவனுக்கு பணிவிடைகள் வேறு, பேரன் பேத்தி மற்றும் தன் குழந்தைகள் எல்லோரையும் கவனித்துக்கொள்வது,
பின் இரவு உணவினை உண்டபின் நாங்கள் சுவர்க்கம் சென்றுவிடுவோம் என்பதால் எங்களின் நாள் முடிந்துவிடும்.
வீட்டின் செலவுகளனைத்தும் பால், தயிர்,முட்டை, விற்கும் வரவுகளிலேயே ஓடிவிடும். மிகவும் சிக்கனமாக வாழ்ந்தவர்கள்.
நம் அம்மாக்கள், அவரின் திறனின் அருகில்கூட நிற்கமுடியாது. படுத்துவிடுவார்கள், பின் ஒருவாரம் ஒன்றுமே வீட்டில் நடக்காதநிலை ஆகிவிடும்.
சமையலிலும் சரியான கில்லாடி. அவர்களின் மண்சட்டி விரால்மீன் மற்றும் கெளுத்திமீன் குழம்புக்கு நான் அடிமை. இப்பொழுது நான் அசைவத்தை நிறுத்திவிட்டிருக்கிறேன், முப்பது வருடங்களாகின்றன.
எல்லோரிடமும் சமமான அன்பு காட்டுவார்கள். எந்த முக்கிய விவகாரங்களிலும் தலையிடமாட்டார்கள்.
ஏனோ யாருக்குமே என் தாயை மட்டும் பிடிக்காமலேயே போய்விட்டது. முகத்திற்கு நேரேயே பேசிவிடுவதாலா? என்று தெரியவில்லை.
சரி அய்யாம்மாவுக்கு வருவோம். என் காசியக்காவின் மரணம், சபரியக்காவின் குழந்தைப்பிறப்பின் பொழுது ஏற்பட்ட மரணம், இவைகளை அவர்களால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. ஏன் ஏற்றுக்கொள்ளவே முடியாமல் கடவுளிடம் அரற்றுவார்கள். அதன்பின் கடமைக்கே வாழ்வதுபோல தோன்றியது அவர்களின் வாழ்க்கை.
முதல்முறையாக தன் மகனின் வீட்டிற்கு திருச்சி சென்றிருந்தார்கள்.
ஒருநாள் திருச்சியிலிருந்து சித்தப்பா கூறினார், அய்யாம்மாவுக்கு புற்று என்று. வயிற்றின் பக்கம் உணவுப்பாதையில்.
டாக்டர்களும் உறுதிசொல்லிவிட்டனர். காப்பாற்றுதல் அரிதென்று. என்னென்னவோ முயற்சித்தும் பலனில்லை. ஆறு மாதங்கள் இருப்பார் என்றும் கேடு வைக்கப்பட்டது.
எங்கள் வீட்டில்தான் பின்னர் வாழ்ந்தார். டாக்டர் முன்னெச்சரிக்கையாய் பல விஷயங்கள் சொன்னார். வலியால் நாலு தெருக்கள் கேட்கும்படி கத்துவார்கள் என்றும்.
நாங்கள், எங்கள் படை எப்பொழுதும் அவர்களிடம் பேசும்பொழுது சிறுவயதிலிருந்தே ஜோக்கும் நையாண்டியுமாயே பேசிக்கொண்டிருப்போம். எங்களை ஒவ்வொரு நிமிடங்களிலும் நன்றாக ரசிப்பார்கள். அகத்தின் வலி சிறிதுசிறிதாக முகத்தில் தெரியத்துவங்கியது.
நாங்கள் கல்லூரிநாட்களில் இருந்தபொழுது அது, அவர்களை இந்தசமயம் நெருங்குதலை குறைத்துக்கொண்டிருந்தோம்.
ஒருநாள் அய்யாம்மா என்னிடம் கேட்டார்கள், "செத்துப்போகப் போகிறவள்தானே என்று என்னோடு பேசமாட்டேன் என்றிருக்கின்றாயா?" என்று.
ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டேன். அதன்பின் அவர்களுடன் மிகுந்த அன்புடன், ஒரு மூத்த பேரன் என்கின்ற வகையில் மிக அருகிலேயே இருந்தேன்.
ஆனாலும் ஒருநாளும் வலியென்று யாரிடமும் சொன்னதேயில்லை. டாக்டரே வியந்து சொன்னார், "என் வாழ்நாளில் இப்படியொரு வைராக்கியமான பெண்ணைக் கண்டதேயில்லை."
இறந்தபின், அவர்களுக்குரிய ஒரு இறந்தநாளில் அவர்களுக்காக செய்யப்பட்ட படையல்களை, படைக்காமல் சென்றுவிட்ட குற்றத்திற்காக, தனக்கு எப்பொழுதுமே பிடிக்காத என் தாயையும் தன்னோடு எடுத்துக்கொண்டார்கள்

Saturday 14 July 2012

அக்கா என்ற அத்தை

அவனின் வாழ்க்கையில் அவனை மிக அதிகம் பாதித்தவள் அவள்தான்.
அத்தை, அக்காள், அல்லது அம்மா என்று எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். ஆனால் அத்தை முறைதான் உண்மைநிலை.
அவனின் மூன்று வயதில் என்று நினைக்கிறேன். அப்பொழுது அவளுக்கு 12 வயதிருந்திருக்கும். இன்னும் பசுமையாகவே நினைவுகளின் ஓரத்தில் ஒட்டிக்கிடக்கின்றது இந்த நிகழ்வு.
ஒரு அழகிய குருவிக்குஞ்சு அவனருகில் அமர்ந்திருந்தது. அதற்குப் பறக்க முடியவில்லை.
அப்பொழுது அவள்தான் அந்தக்குஞ்சினை எடுத்து அதன் கூட்டினுள்விட்டாள். மற்றும் அதற்கு தினமும் உணவுவைப்பாள் பறக்கப் பழகுவரை. அது ஒரு இறக்கம் கொள்ளும் தன்மை. அன்பு.
காசிமணி என்பது அவளின் பெயர். பெயருக்கேற்றவாறு ஒரு தெய்வம் அவள்.
என்னின் மானசீகத் தோழி. எங்களுடன்தான் சிலகாலம் வாழ்ந்தாள். உரிமையோடு என் தாயுடன் சண்டையிடுவாள். என் தாய்க்கும் மகளாகவே வாழ்ந்தாள்.
என் 6 வது வயதில் என் பெற்றோர் வெளியூர் சென்றிருந்த ஒருசமயம், நான் அவளின் பொறுப்பில் இருந்த ஒரு நாளில் என்னை அதிகமாகத் திட்டிவிட்டாள். காரணமென்னவென்று ஞாபகமில்லை. நானும் மிகுந்த  கோபத்துடன் அவள் வேலையாய் இருந்த நிமிடம் அடுக்கப்பட்டிருந்த தலையனைக் குவியலினுள் புகுந்த நினைவு மறந்து உறங்கியேவிட்டேன்.
என்னைத் தேடினவள், நான் கோபப்பட்டு வெளியே சென்றுவிட்டேன் என்று எண்ணி கிட்டத்தட்ட ஊர்முழுக்க தேடிநின்றாள். நான் கிடைக்கவில்லை. எப்படிக் கிடைப்பேன், நான்தான் தலையனைக் குவியலினுள் வெளியே தெரியாமல் உறங்கிகிடக்கிறேனே.
ஒரு 2 மணிநேரம் கழித்து நான் விழித்து வெளிவந்தேன். அங்கு என் அக்கா அழுதுகொண்டிருக்கிறாள். அருகில் பக்கத்து வீட்டார்கள் அமர்ந்திருக்கிறார்கள்.
என்னைக் கண்டவுடன் வாரியெடுத்து அணைத்துக்கொண்டாள். இப்பொழுது அழுகை இன்னும் தீவிரமாக இருந்துகொண்டிருந்தது.
நான் என்ன நடந்ததென்று புரியாமல் விழித்துக்கொண்டிருந்தேன். மறக்கவேமுடியாத நிகழ்வாக அது மாறிவிட்டது.
படிப்பு முடிந்தபின் எங்களின் கிராமத்திற்கே சென்றுவிட்டாள் தாத்தாவுடன்.
பின்னர் அவளுக்கு விருப்பமில்லாத ஒரு இடத்தில் திருமணமும் முடித்துவைக்கப்பட்டது. யாரிடமும் கருத்துக்கள் கேட்கவில்லை என் தாத்தா. அந்தக் கணவன் என்னவெல்லாம் என் அக்காவிடம் கேட்டான் என்பதல்ல இந்தக்கதையின் சாராம்சம். கேட்டால் அந்த இறந்துவிட்டவனை தொண்டிஎடுத்துக் கொல்லநினைப்பீர்கள்.
ஒரு உன்னதமான உயர்ந்த அன்பினையும், கரிசனத்தையும் அடிப்படையாக்கி பதியப்பட்டிருக்கின்றது இந்தக்கதை.
புகுந்த வீட்டிலும் இருந்த அனைவரும் (கணவனைத்தவிர) அவளை அன்பாகவே நடத்தியிருந்தார்கள். ஆனாலும் அவளுக்கு வாழ்கை கசந்துவிட்டது.
என் தாயையும் தன் தாயாகவே மதித்துவிட்டிருந்தமையால், மனம்விட்டு இங்குவந்து பேசுவாள். மற்றவர்களின் வார்த்தைகளை மதிக்கமாட்டாள்.
ஒரு தினம் இங்கு வந்திருந்தபொழுது, இரவு முழுவதும் என் தாயிடம் கதறியிருக்கிறாள், \"இனி இங்கேயே உங்கள் மகள்போல இருந்துகொண்டு வாழ்ந்துவிடுகிறேன், கணவனிடம் செல்லமாட்டேன்\" என்று பிடிவாதமாக சொல்லியிருக்கின்றாள்.
நம் சமூகம்தான் எப்பொழுதும் இதுபோன்ற குரல்களுக்கு மதிப்பளிப்பதில்லையே.
அறிவுரைகள் பல அள்ளி வழங்கப்பட்டன.
கடைசியில் ஊருக்குச் செல்ல கிளம்பினபொழுது சொன்னாள், என் காதுகளில் இன்றும் 42 வருடங்கள் கழித்தும் ஒலித்துக்கொண்டிருக்கின்றது, \" நான் போகிறேன், இனி உங்களிடம் வரவேமாட்டேன்\" என்று விரக்தியான ஒரு தாழ்ந்த குரலுடன். அந்த வார்த்தைகளை யாரும் பெரிதுபடுத்திக்கொண்டதாகத் தெரியவில்லை. இதுதான் விதி.
ஆனால் இந்தகாலங்களில் இப்படி நடந்துவிடுவதில்லை. மதியினை பயன்படுத்தி விடுகின்றனர், மக்கள்.
பத்து நாட்களுக்குப்பின் எங்களூரில் எங்களின் தாத்தாவின் அறுபதாம் திருமணம் தடபுடலாக நடந்தேறியது.
அன்றுகூட என் அக்காவின் நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் தெரியவில்லை. அவள்தான் ஏற்கனவே என் தாயினை கண்டுவந்தபின் முடிவு செய்துவிட்டாளே, என்ன எப்படி அதை நடத்தவேண்டுமென்று. எல்லோரும் விடைபெறும் சமயமும் ஒரு வார்த்தையை விட்டாள், \"அடுத்தவாரம் சந்திப்போம்\" என்று.
சில நேரங்களில் அர்த்தம் பொதிந்த வார்த்தைகளை நாம் தவற விட்டுவிடுகிறோம்.
பொங்கல் திருநாள் என்றால், படிக்கும் பிள்ளைகளைக் கொண்டுதான் வீட்டுவேலைகள் அனைத்தையும் செய்யவைப்பார்கள் நம் பெற்றோர்கள். இது இங்கு தமிழகத்தின் வழக்கம்.
அப்படித்தான் அவனும் தன் பெற்றோருக்கு கட்டுப்பட்டு வீட்டுக்கு வெள்ளையடித்துக் கொண்டிருந்தான்.
ஒரு தந்தி வந்தது.
அந்தக் காலத்தில் எல்லாம் தந்திதான்.
தந்தி என்றால் ஏதோ செய்தி, கவனித்தான் எல்லோரையும்.
படித்தவுடன் தந்தையின் தலைகவிழ, தாய் கதரிக்கதரியழ, விஷயம் தெரிந்தபின்னும் அவன் அழவில்லை.
அதுதான் இன்றுவரை அவளை நினைக்கும் பொழுதெல்லாம் அழுதுகிடக்கின்றானே.
அவள் விஷமருந்தி இறந்துவிட்டிருக்கிறாள்.
ஊர் செல்லும்வரை எந்த எண்ணமும் தீண்டவில்லை.
அவளை அமரவைத்திருந்தார்கள்.
அவளின் முகத்தழகு அவள் இறந்ததினை உணர்த்திட முடியவில்லை. சிரித்துக் கொண்டுதானிருந்தாள். உறவினர்கள்தான் ஒவ்வொரு நிமிடமும் உணர்த்திக்கொண்டிருந்தனர் அவள் இறப்பை.
அவள் இறந்த அறையினுள் அந்தக் கட்டிலில் சென்று அவனும் படுத்துக்கொண்டான். சிந்தனையேதும் இல்லை. எல்லாமும் நின்றுவிட்டிருந்தது. ஓடாத கடிகாரம்போல்.
அவள் அவனுக்குள் தன்னை முழுவதுமாய் பரப்பிக்கொண்டு இருந்திருந்தாள். அது அந்தப்பொழுதில் அவனால் உணர முடியவில்லை. இந்தநிமிடம்வரை இப்பொழுதும் அவளிருப்பை அவனுள் உணரமுடிகிறது.
வெளியில் சொன்னால் முட்டாள் என்று பட்டம் கட்டிவிடுவார்கள்.
நாட்கள், வருடங்கள் கடந்துவிட்டிருக்கின்றன.
இன்றும் அவள் போட்டோவினுள்ளும் எனக்குள்ளும் சந்தோசமாய் சிரித்துக்கொண்டுதான் இருக்கின்றாள். சில நேரங்களில் என் மகளின் சிரிப்பினூடே அவளை காணமுடிகிறது. கொஞ்சம் மாற்றிக் கொண்டிருப்பாளோ தன்னை.

பெண்மை

குயிலின் ஆனந்தப் பாட்டு,
கூவிநின்ற திசை நோக்க,
பாடினவன் பறந்தேவிட்டான்.

விரட்டிநின்ற தென்றல் வலிமை,
விட்டோடிப்பறந்த, அலையலையாய்
தவன்ற மேகக்கூட்டங்கள்போல்.

என்னிம்சை போதுமென்று
மௌனமொழி காட்டிநின்றாள்
மந்திரப்புன்னகைக்காரி இமசையரசி.

கண்ணழகிருந்தென்ன, கன்னம்
கிண்ணமாய் அமைந்தென்ன,

எண்ணம் இனிமையாயிருந்தென்ன,
எழுதி வைத்த மை கருத்தென்ன,

சங்கீதமொழி உரைத்தென்ன,
சந்திரனை முகம் கொண்டென்ன,

கள்ளமில்லா அன்பு பொழிந்தென்ன,
கருணைக் கடலாயிருந்தென்ன,

கசக்கிப் பிழியத்தான் பெண்மை.
அடிமைப்படுத்தத்தான் ஆண்மை.

பூமியினை பூத்தே நிற்கும் கடப்பாரைகள்,
பொறுமைகொண்டு அடங்கிக் கிடப்பதால்.

Sunday 8 July 2012

பச்சையாத்தாவின் பசுமை நினைவுகள்

அவன் வேலைகளிலிருந்து ஓய்வுபெற்று சரியாக நூறு நாட்கள் முடிந்திருந்தன. 
ஒய்வு என்றதும் அரசுவேலை என்று நினைத்துவிடாதீர்கள். அவனின் வயது 55 . சுயதொழிலில் அளவுகடந்த மன உளைச்சல். தானாகவே ஒய்வு பெற்றுக்கொண்டான். 

சொந்தஊருக்கு செல்லலாம், கொஞ்சம் மன அமைதி கிடைக்கும் என்று கிளம்பினான். அது ஒரு அழகிய குக்கிராமம். 
கல்லூரிநாட்களில் கோடைவிடுமுறை என்றால் அந்த கிராமமே அவனுக்கு கதி. 
அவன் அத்தைமகள், காதலி. மிகுந்த அழகானவள். அவளுக்குக்கூட அவள் உதட்டில் ஒரு அழகான........ சரி அதுவல்ல முக்கியம், தோல்விக்கண்ட காதல். 

அந்தக்கிராம வீடு, ஊருக்குள் செல்லும் பாதைகளனைத்தும் கொஞ்சம் மாறிவிட்டிருந்தன. அங்கிருந்துதான் இந்த மரப்பலகையினாலான பெஞ்ச் என் தந்தையின் பங்குக்காக கிடைக்கப்பெற்றது. தேக்கினாலானது. 
குடும்பம் மிகவும் பெரியது. எங்களின் தாத்தாவின் சகோதரர்கள் குடும்பங்கள் பற்றிகூட நாங்கள் அறிந்துகொண்டிருக்கவில்லை. 

பள்ளிநாட்களில் செல்லும்பொழுது என் பத்து வயதில் என் பாட்டி, அதில் படுத்திருப்பாள். 
பச்சையாத்தா, அவள் பெயர். அப்பொழுது வயது தொண்ணூறு. ஆனாலும் காலையிலும், மாலையிலும் அந்தக்கூனுடன் வீட்டை முழுவதும் கூட்டிப்பெருக்கிவிடுவாள். வேறு யாரையும் செய்யவும் விடமாட்டாள். 
எங்கள் இளையபட்டாளம் அவளின் பின்பலம் அறியாமல், மேம்போக்காக அவளைச் சீண்டிநிற்போம். அவள் தூங்கும்பொழுது மூக்கினுள் மாத்துக்குச்சியை நுழைத்து உசுப்பேற்றுவோம். கோபம்கொள்ள மாட்டாள். அதுதான் சிறப்பு. மேலும் மிகவும் அன்பானவள். 

அவள் ஒருநாள் இறந்தேவிட்டாள். நாங்களும் எந்த எதிர்பார்ப்புமின்றி காலையில் கிளம்பி மாலையில் வந்துசேர்ந்தோம். இந்தக்காலத்தில் கிராமத்திற்குச்செல்ல 2 மணிநேரம் ஆகின்றது. 
அங்கு வீட்டின்முன் ஏகக்கூட்டம் கூடிநின்றது. திருமணவிழாவினைப்போல. 
முதல்முறையாகத் திகைத்துவிட்டிருந்தேன். அப்புறம் விசாரித்ததில் தெரியவந்தது, எனக்குப் பெரியதாத்தாக்கள் மட்டுமே பத்துபேர் என்பது. அதுவரை அவர்களெல்லாம் என் உறவுக்காரர்களேன்று தெரிந்துகொண்டதில்லை. மேலும் எந்தநாளும் அவர்களை நான் கண்டதுமில்லை. 
அவர்கள் பெரும்பணக்காரர்கள். சொல்லப்போனால் என்தந்தையே ஒரு பெரியதாத்தாவிடம்தான் வேலை . பார்த்துக்கொண்டிருந்திருக்கின்றார் .
மற்றவர்களுடன் இருக்கமாட்டேன் என்றுதான் பாட்டி என் தாத்தாவீட்டில் இருந்திருக்கின்றாள். 
அந்த பலகைக்கட்டிலில் இதுவரை எத்தனையோமுறை நான் படுத்திருந்திருக்கிறேன். ஆனாலும் அவள் நினைவு வந்ததில்லை. 
வீடு என்னை அவளின் நினைவுகளில் கரைத்துவிட்டது. 
தாத்தாதான் ஒருநாள், கடைசி நாட்களில் அவளைப்பற்றி கூறினார். 
மிகவும் நல்லவள். 
கேட்டவற்கெல்லாம் உதவுபவள். 
கெட்டவர்களை பார்க்க மறுத்துவிடுவாள். 
அப்படித்தான் மற்ற தாத்தாக்கள் அனைவரையும் 15 வருடங்களாக சந்திக்க அனுமதித்ததே இல்லை. 
நல்ல ஞாபக சக்தி. 
நான் பிறந்த சமயம், இவன் தொழிலில் சிறப்பாக வருவான், என்று வாழ்த்தினவள். 
சமையலில் கில்லாடி. 
மாடுகள் கட்டி பால் விற்பாள். அது அவளின் பொழுதுபோக்கு. 
வீட்டிற்கு வரும் யாருக்கும் விருந்தளிக்காமல் அனுப்பியதில்லை. 
பணத்தை மதித்ததில்லை. அன்புக்கு மட்டுமே மரியாதை. 
பாட்டா திடீரென்று பணத்தையெல்லாம் இழந்து நின்றபொழுது, ஆறுதல்சொல்லி அவளின் சம்பாத்தியத்தில் அவருக்கு சோறு போட்டவள். பாட்டா இறந்தபின்னும் குடும்பப்பொருப்பினை கையிலெடுத்து, எல்லோரையும் கரையேற்றினவள். 

அந்த வீட்டினுள் இன்னும் அவள் இருந்துகொண்டுதான் இருக்கிறாள். இல்லையானால் அவள்பற்றின சிந்தனைகள் இந்தநிமிடம் எனக்குத் தோன்றுதலேன். 

அவளுக்கு சிறுவயதில் நாங்கள் கொடுத்த சில்மிஷ விளையாட்டுகளை எண்ணி வெட்கமாக இருந்தது. 

வெளிவரும்வேளை ஒரு இனம்புரியாத நிம்மதி. அவள் படுத்துறங்கின பலகைக்கட்டில் இப்பொழுது என்னிடம்தான் உள்ளது. 
வீட்டினுள் நுழைந்தவுடன் அந்தக்கட்டிலில் படுத்தேன். கண்களில் சில நீர்த்துளிகள். என்னவாக இருக்கும், என்னை ஆசீர்வதித்திருப்பாளா.

Saturday 7 July 2012

காதலை மறந்துநின்ற கிளி

உன்னை .............நினைக்க மறக்கவில்லை ..........

எத்தனை முறை என்னைஉனக்கு
காண்பித்தும்,
உன்பித்தும், என்பித்தும்
குறையப்போவதில்லை.

நீ குடித்து கடல்நீரினை வத்தடிக்கமுடியுமா?
அல்லது
நான்தான் வடித்த முத்தத்தால் உனை நிரப்பிடமுடியுமா.

சேர்ந்தபின்
நம்மைப் பிரித்திடத்தான் முடியுமா.
சேர்த்துவைத்த
நட்புக்காதலைத்தான் மறைத்திடல் முடியுமா.

இலங்கையின் மடியினில் தவழ்ந்து,
இளங்கையின் மணம் ருசித்து,
கலங்கலில் கவிதைகள் படித்து,
கணங்களை காற்றினில் பறக்கவே விட்டு,

சிக்காகோவினுள் புகப்போகும்
திருவிளக்கே, சிறுனகையே,
சிற்றிடைச் செந்தாமரையே,
வருக வருக நிலா மனம்கனிந்து.

குயிலின் ஆனந்தப் பாட்டு,
கூவிநின்ற திசை நோக்க,
பாடினவன் பறந்தேவிட்டான்.

விரட்டிநின்ற தென்றல் வலிமை,
விட்டோடிப்பறந்த, அலையலையாய்
தவன்ற மேகக்கூட்டங்கள்போல்.

என்னிம்சை போதுமென்று
மௌனமொழி காட்டிநின்றாள்
மந்திரப்புன்னகைக்காரி இமசையரசி.