Friday 6 April 2012

காதலுக்கு ஓர் விளக்கம்

விலகிக்கிடந்த வாழ்க்கையினை
ஒழுங்குபடுத்தின உன்னை,
தெய்வமாகவே தரிசிக்கிறேன்.

அது உன் நெற்றிப்போட்டினை
சரிசெய்த நிலையில்லை,
உண்மைக்காதலின் ஆராதனை.

உனக்குமட்டுமே புரிந்த என்னை,
எனக்குமட்டுமே தெரிந்த உன்னை,
சங்கமித்த ரகசிய ராப்பொழுது.

மனிதத்தின் மறுபக்கம் உணர்ந்து,
மழலைச் செல்வமளிக்கத் துணிந்த
ஓர் அன்பின் அரவமற்ற சிந்தனைத்துளி.

சரியா தவறா நெறியா பிழையா
என்பதல்ல இந்த உறவு நிலை,
இறை கொண்டுதந்த ஜென்மஉறவு.

நம் நேசம் வான்வெளி போல்
நீள்வதில்லையன்பே, அஃது
வான்வெளியினில் கரைந்துகிடப்பது.

காட்சிப்பிழை என உலகம் மறுப்பினும்,
கண்ணே, முளைந்த முளை, விதைக்குள்
செல்ல இங்கு விதியில்லை, உணர்.

நியாயமற்றது என மனம்
நினைப்பினும் நிலைகொண்டபின்
நினைவுகள் விடுவதாயில்லை.

வானின் சுகத்துக்கும், வாழ்வின்
சுகத்துக்கும், வரையறையில்லா
மனிதசுகத்துக்கும் முடிவேயில்லை,

ஆதலினால் காதல் கொள்.

No comments:

Post a Comment