Friday 6 April 2012

அது ஒரு கனாக்காலம்

தடுக்கிவிழுந்ததென்னவோ 
வாழைக்காட்டினில், 

நிலைதெளிந்து பள்ளத்தாக்கினை 
பார்த்துக் கடந்தெழுந்து, 

அணை கொண்டு, நிரம்பின 
தேன்குளத்தினில் நீர்பருகி, 

மலைகளைக் கசக்கி குதித்துக் 
குமமாளமிடவே ஆசை. 

மனம் கசங்கிக் 
குழம்பின நிலையில் 
மலரையே சிதைத்திருக்கின்றே

 

கார்மேகம் இடி இடித்ததில் பயம், 
அர்ஜுனன் பேர் பத்து எனவைத்தது. 

பால்யத்தில்... 

இனிமையான, மழையினை 
இதமாக விரும்பியே நனைந்தேன். 

இளமையில்... 

குளுமையான தென்றலுக்கும் 
அடிமையாகியே கிடந்தேன். 

பருவத்தில்... 

உறைபனி பஞ்சுத்திட்டாய் 
உதிர்ந்ததில் துள்ளிக்குதித்தேன். 

மனையினில்... 

பெற்றுயிர் பிரிந்ததில் உற்றுயிர் 
உருகிநிற்க உலகம் மறந்து மலைந்தேன். 

புறம் தழுவின கரங்கள் உணர்த்தின 
அன்பினில், கரைந்தேவிட்டேன். 

மழையும்,மலையும் மனமும் கரையும், 
தினமும் தடவும் தென்றலும் உறையும். 

உன் ஒரு ஓரவிழிப் பார்வை உரசினால். 
இதழோரத் தேனின் கற்றைக் கசிவினால்.


மல்லிகைக்கொடி பந்தல் இடுகிறேன் 
பூமிப்பந்து முழுமைக்கும், என் 

ராசகுமாரனுக்கு மல்லிகையை 
மிகவும் பிடிக்கும் என்பதற்காக.. 

உலகமே இந்த மணத்தினில் 
மயங்கிக் கிறங்கிக்கிடக்கட்டும். 

இந்த மலர் மஞ்சத்திலேயே 
தவித்து உறங்கிக்கிடக்கட்டும். 

அதன் வெள்ளையுள்ள அழகிலேயே 
மறந்து மயங்கிக்கிடக்கட்டும். 

எல்லோர்க்கும் பெய்யும் மழைபோல், 
என் காதலால் உலகமே மலரட்டும். 

கற்பனைக்குத்தான் அளவில்லையே, 
கனவுகளுக்கு அடிமையான காதல். 

தாழம்பூ மணமுகர்ந்து பாடி, 
துணைதேடி வருமே நாகம். 

மயில் அறியும், ஆடிவரும் ஆணை 
அழைப்பதெப்போழுது என்பது. 

உன்னை எடுத்துக்கொள்ள கொடுத்த 
சந்தர்ப்பங்களை வீணடித்தும், 

காயங்களை இங்கு கட்டிவிட்டு 
மருந்தினை அங்கு கொட்டிவிட்ட 

இறைவனை கண்டிக்கிறேன், 
ஆசையாய் தண்டிக்கிறேன்.

No comments:

Post a Comment