Sunday, 27 May 2012

காதலுக்கு வாழ்த்து

வான் மழைக்காக ஏங்கி,
வானம் பார்க்கும்
வறண்ட நிலமாக
இருக்கும் நான்,

புதிதாய் என்னுள்
வேர்விட துடிக்கும் நாற்றுக்கு
எப்படி
உயிர் கொடுக்க முடியும்...?

கேட்கமட்டுமே முடியும்
இந்தக்குயிலின் கீதத்தை,

காணமட்டுமே இயலும்
இந்தமயிலின் ஆட்டத்தை,

வீசுதென்றல் தனக்கான
இன்பம் நினைத்து வீசுதலில்லை.

வானமழையும் ஒவ்வொரு
நாற்றையும் வளர்க்கப் பொழிவதில்லை.

எல்லாப்பூக்களும் கனி
கொடுத்து நிற்பதில்லை.

சில முரண்பாடுகள் இன்றி
எவருக்கும் வாழ்க்கையில்லை.

எல்லையில்லா ஆகாயம்
அளவில்லா இன்பம்
நிரந்தரம், காதல்போல்.

ஈர்த்த கடலினை கோர்த்து,
எல்லைகட்டின மேகங்கள்
உருமாறும் தரிசனம்.

அற்ப ஆயுள் கொண்ட மேகம்
சொற்ப ஒளிகொண்ட வானை
அசுத்தப்படுத்தமுடிவதில்லை.

நிலை மாற்றம் கொண்டிருக்கும்
அவை, நிறைக்கமுடிவதுமில்லை.
அதுவே காமமும் காதலினைப்போல்

உயிரே......,

உன்னை நினைத்து
உனக்காக உயிர் வாழ,
ஆயிரம் பேர் இருப்பினும்.......,
எனக்கு மகிழ்ச்சியே......,

ஏனெனில் .......,

உன்னை நினைத்தே வாழ்ந்து......,
உனக்காகவே
உயிர் விடும் ஒரே ஜீவன்.......,
நாந்தானடா என் அன்பே.!

எனக்குள்............

கரைந்தே கலந்து கிடக்கும்
உன்னை இரும்பென எங்ஙனம்
பிரித்துப் பிய்த்தெடுக்க இயலும்.
அல்லது தேய்த்துக் கொல் எறும்பென.

தேடித்தேடி தழுவவந்த
வீசுதென்றல் தவழும்போழுது
தவற விட்டுவிட்டு அனுபவிக்காமல்,
ஜன்னலைக் குறை சொல்கிறேன்.

கனிந்த காதல் களிப்புற்று
கவலைமறந்து, கைக்குழந்தை
தாயிடம் பிதற்றி கைவைக்குமே
கைகள் கண்டவிடமெல்லாம்,

அதனினைப்போல் மனம்
நினைத்தவாறெல்லாம்
தினம்தினம் உளறித்திரிகின்றேன்,
உளம்முழுதும் உனையே நினைத்து.

காதலை வாழ்த்த விரும்பினேன்,
விழைவு ஒரு இனிய முத்தமாற்றம்
ஆன்மாவினுள் கொண்டாடினது.

இனிய அந்த முத்தத்தின்
கால அளவு, உறைந்த
ஒரு மணித்துளி, உணரமுடிந்ததா?

படத்தோற்றத்தின் சொத்துக்களின்
அளவு கூடிவிட்டமையால்,
சொத்துக்குவிப்பு வழக்காகியது.

Wednesday, 16 May 2012

நேர்மையாய் வாழும் மனநிலை கொண்ட இன்றைய இந்தியன்


1) வரிகட்ட மலைக்கிறான்.
ஏனெனில், அரசு செய்யவேண்டிய
மருத்துவ உதவி, நகராட்சி சாலைகள் பராமரிப்பு, குடிநீர், விலைவாசி கட்டுப்பாடு, கொசு ஒழிப்பு, ஏழைகள் மாதவருவாய் 15000 க்கு உயர்த்தும் முயற்சிவிவசாயத்திற்கு உதவும் தன்மை, தடையில்லாத மின்சாரம், ரௌடிகளை அடக்குதல், அரசு எந்திரம் மாமூல், லஞ்சம்  இல்லாத துரித நடவடிக்கைகள்,
இவைகளை செய்யவோ அல்லது கட்டுக்குள் வைக்கவோ எந்த முயற்சிகளும் மேற்கொள்வதில்லை.
2 ) நிலம் வாங்கும், விற்கும் பொழுது பத்திரப் பதிவுத் தொகையை குறைந்த மதிப்பில் பதிவு செய்கிறான். ஏனெனில் பதிவுக் கட்டணம் அதிக சதவிகிதம் வசூலிக்கப்படுகிறது.
3) தாலுகா அலுவலகத்தில் லஞ்சம் கொடுக்கிறான்.
தன்னுடைய நிலத்தை அரசியல் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாக்க மிகவும் கவனமாயிருக்க வேண்டியதிருக்கிறது.
கோடிகளை கொள்ளையடித்தவன் அதிகாரிகளை கையில் எடுத்து இஷ்டம்போல் செலவிடத் துணிகிறான். மேலும் பட்டா மாற்றம் துரிதமாக நடப்பதில்லை. பணம் இல்லையெனில் வாழவே முடியாத நிலையை உருவாக்கிவிடுகிறார்கள்.
4) வருமான வரிகள் கட்டும்பொழுது எப்படிக் குறைத்துக் கட்டுவது என்றே ஆராய்கிறான்.
நாம் கட்டும் வரிப்பணம் எப்படியும் நல்வழியில் அரசினால் செலவிடப்படாது என்ற கவலை.
வாடகை மட்டுமே 15000 வரை இருக்கும் பொழுது, வருமான வரையறை மிகமிகக் குறைவாய் இருப்பது.
 
கோடிகோடியாய் கொள்ளையடிக்கும் அதிகாரிகளும், அரசியவாதிகளும் வரியே கட்டாமல் வலம்வரும் பொழுது நாம் மட்டும் கட்டவேண்டுமே என்ற நிலை.
எப்படியும் எல்லாவித லஞ்சத்திற்கும் பணம் செலவளித்தேயாக வேண்டிய நிலையில் கறுப்புப் பணத்தின் உருவாக்கம் அவசியத் தேவையாகிறது.
5) அரசியல், அதிகாரிகள்  அராஜகத்திற்கு அடிபணிகிறான்.
தவறே செய்யாவிடினும் லஞ்சத்திற்காக ஏதாகிலும் குற்றம் கண்டுபிடித்து, தொழிலே செய்யவிடாமல் அதிகார துஷ்ப்ரயோகம் செய்து தொந்தரவு கொடுப்பது.
 கோர்ட், கேஸ்கள் முடிக்க 10 வருடங்கள் ஆகும் என்றநிலையை சாதகமாக்கி துணிந்து தப்பு, அராஜகம் செய்வது.
 
ஒரு கேள்வி: தொழில் செய்வோர்கள் எல்லா வகைகளிலும் தவிர்க்கமுடியாமல் அதிகாரிகளுக்கு லஞ்சமோ மாமூலோ கொடுத்தே வாழவேண்டியுள்ளது.
ஆனாலும் அவர்கள், வருமானவரி அதிகாரிகளையும் மற்ற அரசு அதிகாரிகளையும் சந்திக்கும்பொழுது பணம் கொடுத்த கணக்குகளுக்கும் விளக்கமளிக்க வேண்டியுள்ளது.
உண்மைகளையும் கூறமுடியாத நிலைமை.
அரசு, மக்களின் நல்வாழ்வுக்கும் வழிவகுக்காமல், தொழில் செய்வோரையும் வாழவும் விடுவதில்லை.

Friday, 6 April 2012

உள்ளிருப்பதே வெளியே

ஆணவமாய் ஆட்சிசெய்யும் அழகிய
ஆழித்திரை அவசரத்தையும் வென்று,

தன்னுயிர்ச் சக்தியின் துணைகொண்டு
தழுவித் தனிமைப்படுத்திப் பிரித்தெடுத்த

தேனுமாய் தேடித்தேடி உடல் நனைக்கும்
மழையுமாய் மாற்றிக்கொடுத்த ஆதவன்.

தந்துனை பற்றி எடுத்துரைத்த பயணம்.
நிலாப்பெண்ணின் சுகமாயின சயனம்.

நினைவு மறதிதான் கவிதைக்கருவுக்கு,
கருவுக்குள் நுழைந்த உயிர் உருவமாய்.

மாதம்பல காத்திருத்தல் வேண்டுமோ,
ஆதவன்பால் கொண்ட அன்பு மறைந்திட!

வட்டநிலாவை இட்டுவைத்த முகம் ,
பட்டுஇதழ்கள், பொருத்திவிட்ட பிறைகள்,

அரைவட்ட அழகில் உறையிட்ட
கறைகள், திரையிட்ட அற்புத அறைகள்.

அவிழ்ந்து ஆடின அறையுருவினை
மலர்கொண்ட, மருவினில் மயங்கினபின்,

பாதியினைக் கண்டு மீதியினை
மனதினில் கனவாக்கி உருவாக்கம்.

மிச்சமாக்கின இரவை உச்சமாக்கின
நிலையினில் உலர்ந்த உயிர்பரப்பி,

காதலின்கரு விதைத்து, உறவு
முளைத்த கருமையான இரவு.

நீர்நிலைகள் வற்றித் தவிக்கவிடும்
தாகமிகுதியினால் உருவான விக்கலல்ல.

நீர்மிகுந்து நிலைகுலைந்து
செய்வதறியாது உலாவரும் சிக்கல்.

ஆறு பெருகிடின் அணைதல் முடியுமோ?
ஊறு விளைந்திடின் மனத்திடம் பலக்குமோ?

விந்தையான வேங்கைதான்,
வீரமான அரசகுல மங்கைதான்,

இந்தப் புலி பத்துங்குதற், பாய்தற்கல்ல,
பல்பதித்து சதை கிழிப்பதற்கும் அல்ல,

பதமாகக் கதையுரைத்து ,
பஞ்சணைய மஞ்சம் சேர்ந்து,
கொஞ்சி விளையாடி,
மிஞ்சி நிற்பதற்கு.

அஞ்சமறந்து மடி கிடைத்தற்கு.

மயக்கும் மலர்த்தேன் சுவையை
உணர்ந்து தடவப்பட்டபின் நா,

மலைத்தேனி சேகரிக்கும்
தேன்கூட்டினை மட்டுமே
நினைத்துக் கிடக்கும் மனம்.

மாம்பழங்களை அள்ளித்தரத்துடிக்கும்
வளர்ந்து செழித்து உயர்ந்துநிற்கும் மா,

முக்கனியின் ஒருவனாய் உலகுணர்ந்த
பலாக்கனியினைத் தரத்துடிப்பதில்லை.

உள் ஒட்டி இருப்பிருக்கும் வினை,
விழிவழியுரைக்கும் மனம்.

தெய்வீகக் காதல்

சமூக ஒத்துழைப்பில், ஒழுங்கில்
நிறைவேற்றப்படுவது இருமனம்
கலக்க விரும்பும், திருமணம்.

சமூக அங்கீகாரம்.

விரக வேகத்தில் விரைந்து
உடலுரசலில் முடிந்தும்விடும்.
உச்சத்தில் உயிரும் உருவப்படும்.

விதியின் விளையாட்டு.

ரத்த வெள்ளையணுக்கள், உயர்ந்து
ரசம் நிறைந்த சதைப்பையினுள்
நிகழ்த்தும் சதங்கை சங்கீதம்.

இயற்கையின் தர்மம்.

ஏன், எப்படி, எதனால், என்னும்
மொழியுணர முடியாமல்
உயிரை உசுப்பிநிற்கும்.

உணவை வெறுக்கவைக்கும்,
நினைவை இழக்கவைக்கும்,
தூக்கம் மறக்கவைக்கும்

துக்கம் நிறைக்கவைக்கும்,
உடல், மனம், நினைப்பவற்றை
முகத்தினில் உரைக்கவைக்கும்.

காதலின் நிலை.

அது இறையினிலிருந்து வருவது.
உயிர் உரசலின் உச்சம்,உலகத்தால் மாற்றியமைக்க இயலாதது.

முடிவான முடிவு.

கன்னத்தில் முத்தமிட்டால்
திருப்தி அடையமுடியாதது. உரசின
உயிருடன் கலக்க முயலும் முயற்சி.

அலைபாயுதே நினைவுகளில்
கலையாகுதே கர்ம வினைகளும்,

தெவிட்டாத் தேனமுதை
திகட்டத்திகட்ட ஊட்டிவிட்டு,

தெரியாத விளையாட்டினை
புரிந்து, தெரிந்தே விரும்பிநிற்கும்.

ஆழ்ந்த காமக்கடலின் கரைதனில்
காதலலைகளை ஆடவிட்டு,

மூழ்கி மூழ்கி முத்தெடுக்க
முயன்று முயன்று தோற்கிறாய்.

அமைதியாய் இருக்கச் சொல்கிறாய்.
வானத்தை வசமாக்கவும் முயல்கிறாய்.

வந்து முளைத்த வெள்ளியை
வடிவிழந்து மறைவே செய்கின்றாய்.

என்னவேண்டும் உனக்கு
தெளிவாகவே உரைத்துவிடு.

கைகட்டி நிற்க அது மரியாதை. தந்தை.
கண்காட்டிக் கலந்துகிடப்பது அன்பு. தாய்.

கெஞ்சுவது, கொஞ்சுவது, மிஞ்சுவது
ஊடலினுள் திளைப்பது, ஊணாய் மறைவது,

அஞ்சுவது, அமைதியில் கரைவது
அன்பாய் மருவிக்கிடக்கும் காதலில்.

அன்பு செய்தலில் ஆனந்தம் விஞ்சும்
அநியாய அரவணைப்பு காதலில்.

காதல், தெய்வத்தைத் தெய்வத்தினுள்
உருகித் தரிசிக்கும் தெய்வக்கலை.

அது தங்கையில் பிடிவைத்து, கனிந்து
கவர்ந்த அக்காளை ஏறி அனுபவித்தல்.

அது ஒரு கனாக்காலம்

தடுக்கிவிழுந்ததென்னவோ 
வாழைக்காட்டினில், 

நிலைதெளிந்து பள்ளத்தாக்கினை 
பார்த்துக் கடந்தெழுந்து, 

அணை கொண்டு, நிரம்பின 
தேன்குளத்தினில் நீர்பருகி, 

மலைகளைக் கசக்கி குதித்துக் 
குமமாளமிடவே ஆசை. 

மனம் கசங்கிக் 
குழம்பின நிலையில் 
மலரையே சிதைத்திருக்கின்றே

 

கார்மேகம் இடி இடித்ததில் பயம், 
அர்ஜுனன் பேர் பத்து எனவைத்தது. 

பால்யத்தில்... 

இனிமையான, மழையினை 
இதமாக விரும்பியே நனைந்தேன். 

இளமையில்... 

குளுமையான தென்றலுக்கும் 
அடிமையாகியே கிடந்தேன். 

பருவத்தில்... 

உறைபனி பஞ்சுத்திட்டாய் 
உதிர்ந்ததில் துள்ளிக்குதித்தேன். 

மனையினில்... 

பெற்றுயிர் பிரிந்ததில் உற்றுயிர் 
உருகிநிற்க உலகம் மறந்து மலைந்தேன். 

புறம் தழுவின கரங்கள் உணர்த்தின 
அன்பினில், கரைந்தேவிட்டேன். 

மழையும்,மலையும் மனமும் கரையும், 
தினமும் தடவும் தென்றலும் உறையும். 

உன் ஒரு ஓரவிழிப் பார்வை உரசினால். 
இதழோரத் தேனின் கற்றைக் கசிவினால்.


மல்லிகைக்கொடி பந்தல் இடுகிறேன் 
பூமிப்பந்து முழுமைக்கும், என் 

ராசகுமாரனுக்கு மல்லிகையை 
மிகவும் பிடிக்கும் என்பதற்காக.. 

உலகமே இந்த மணத்தினில் 
மயங்கிக் கிறங்கிக்கிடக்கட்டும். 

இந்த மலர் மஞ்சத்திலேயே 
தவித்து உறங்கிக்கிடக்கட்டும். 

அதன் வெள்ளையுள்ள அழகிலேயே 
மறந்து மயங்கிக்கிடக்கட்டும். 

எல்லோர்க்கும் பெய்யும் மழைபோல், 
என் காதலால் உலகமே மலரட்டும். 

கற்பனைக்குத்தான் அளவில்லையே, 
கனவுகளுக்கு அடிமையான காதல். 

தாழம்பூ மணமுகர்ந்து பாடி, 
துணைதேடி வருமே நாகம். 

மயில் அறியும், ஆடிவரும் ஆணை 
அழைப்பதெப்போழுது என்பது. 

உன்னை எடுத்துக்கொள்ள கொடுத்த 
சந்தர்ப்பங்களை வீணடித்தும், 

காயங்களை இங்கு கட்டிவிட்டு 
மருந்தினை அங்கு கொட்டிவிட்ட 

இறைவனை கண்டிக்கிறேன், 
ஆசையாய் தண்டிக்கிறேன்.

காதலுக்கு ஓர் விளக்கம்

விலகிக்கிடந்த வாழ்க்கையினை
ஒழுங்குபடுத்தின உன்னை,
தெய்வமாகவே தரிசிக்கிறேன்.

அது உன் நெற்றிப்போட்டினை
சரிசெய்த நிலையில்லை,
உண்மைக்காதலின் ஆராதனை.

உனக்குமட்டுமே புரிந்த என்னை,
எனக்குமட்டுமே தெரிந்த உன்னை,
சங்கமித்த ரகசிய ராப்பொழுது.

மனிதத்தின் மறுபக்கம் உணர்ந்து,
மழலைச் செல்வமளிக்கத் துணிந்த
ஓர் அன்பின் அரவமற்ற சிந்தனைத்துளி.

சரியா தவறா நெறியா பிழையா
என்பதல்ல இந்த உறவு நிலை,
இறை கொண்டுதந்த ஜென்மஉறவு.

நம் நேசம் வான்வெளி போல்
நீள்வதில்லையன்பே, அஃது
வான்வெளியினில் கரைந்துகிடப்பது.

காட்சிப்பிழை என உலகம் மறுப்பினும்,
கண்ணே, முளைந்த முளை, விதைக்குள்
செல்ல இங்கு விதியில்லை, உணர்.

நியாயமற்றது என மனம்
நினைப்பினும் நிலைகொண்டபின்
நினைவுகள் விடுவதாயில்லை.

வானின் சுகத்துக்கும், வாழ்வின்
சுகத்துக்கும், வரையறையில்லா
மனிதசுகத்துக்கும் முடிவேயில்லை,

ஆதலினால் காதல் கொள்.

காலம் - இந்துமத விளக்கம்

கண்ணிமைக்கும் கணப்பொழுது
ஒரு வினாடி (நமது வினாடியில் ரெண்டரை வினாடிகள்)
60 வினாடிகள்   - ஒரு வினாழிகை,
60 வினாழிகை - ஒரு நாழிகை,(2 1 /2 நாழிகை-1 மணி)
60 நாழிகை - ஒரு நாள்,
15 நாட்கள் - ஒரு பட்சம், (சுக்கில/கிருஷ்ண)
2 பட்சங்கள் - ஒரு மாதம், (சந்திர )
6 மாதங்கள் - ஒரு அயனம், (உத்தராயணம்/ தட்சிணாயனம்)
2 அயனங்கள் - ஒரு ஆண்டு.

க்ருதயுகம் - 17 ,28,000 ஆண்டுகள்,
த்ரேதாயுகம் - 12 ,96,000 ஆண்டுகள்,
த்வாபரயுகம் - 8 ,64,000 ஆண்டுகள்,
கலியுகம் - 4 ,32,000 ஆண்டுகள்,
------------
சதுர்யுகம் - 43 ,20 ,000 ஆண்டுகள்.

71 சதுர்யுகம் - 1 மந்த்வந்த்ரம்,
14 மந்த்வந்த்ரம் - 1 கல்பம்,
150000 கல்பம் - 1 பரார்தம்,
2 பரார்தம் - ஒரு பிரம்மம்.

ஒரு பிரம்மம் என்பது பிரம்மாவின் (வான்வெளியினுள் இருக்கும் அண்டவெளி )
வாழ்வின் மொத்த கால அளவு.