Wednesday 14 December 2011

அனுமதி மறுப்பதேனோ

கூட்டுக்குள் துணை தேவையில்லை.
வாட்டும் துன்பமும் இங்குயில்லை.

பாட்டுக் குயில்கள் கூவிக்களித்திட,
கூடித்திரிந்திட கட்டுப்பாடு எங்கும் இல்லை.

தோட்டத்து மலர்கள் மலர்ந்து சிரித்திட
மணம்பரப்பி கலந்திட மறுப்பதுமில்லை.

தொட்டுவிட்ட தென்றலும் தொடுசுகம்
வேண்டிவந்து தடவித் தழுவுவதுமில்லை.

சொட்டிவிடும் மழைக்கும் முகவரி
கண்டு பொழிந்திடும் அவசியமில்லை.

வட்டமிடும் வண்டுகள் பூவினுள் வீழ்ந்து,
தேன்குடித்திட அனுமதி வேண்டுவதில்லை.

காட்டு மான்கள் காலாற குதித்து நடந்திட
வீட்டு வெளியில் விண்ணப்பமிடுவதில்லை.

சுட்டுவிரல் எனைநோக்கிக் காட்டிட்ட,
சுகராகம் எனக்குள் சுந்தரமாய் பாடிட்ட

கட்டிக்கரும்பே, கனியமுதே, கண்மணியே,
கலையாத கொடிமுல்லையே, காதலியே,

வெட்டிச்செதுக்கின சிலையே, மனக்கூட்டினுள்
நுழைய என்னை மட்டும் அனுமதி மறுப்பதேனோ?

No comments:

Post a Comment