Monday 29 August 2011

நினைவுகள்

முகிலினூடே கசிந்த நிலவொளிபோல்
முகம்மறைந்து, கலைந்த முடிகளினூடே
உன் காந்தக் கண்களின் கிரணங்களையே
கண்டேன் முதன்முதலாய்.

விடிகாலை ஒளிக்கதிர்கள்போல்
என் மனவானில் ஒளிர்ந்தன
அத்தனை சூரியன்களும்
என்பதினை உணர்த்தின நிமிடம்.

முந்திரி ஒன்றுதான் தன் விதைகளை
வெளித்தள்ளி முகம் காட்டிசிரிக்கும்.
அந்தக் காட்டினுள் உன் முகம் மலர்ந்த
மலர்ச்சியினை ரசித்து மகிழ்ந்தேன்.

பின் நடந்த அத்தனை வீழ்ச்சியிலும்
எழ முடியாமலேயே தவித்தேன்.
சிலந்தி தன் எச்சியினைக் கொண்டு
வலைப்பதைபோல் மறுபடியும் மறுபடியும்.

வருடங்கள் பல கடந்தாலும்
நடந்தவைகள் பசுமையாகவே
மனதை வருடிக்கொண்டிருக்கின்றன.
வாழ வழி வகுத்துக்கொண்டிருக்கின்றன.

No comments:

Post a Comment