Tuesday 30 August 2011

பருவம்

விழுந்த துளி
அனைத்தும் நிலைநிற்க
வகையின்றி இருப்பு விரவி
நிலைகொண்ட குளம்.

கிராமத்து அழகு.

நீரை கிழித்து கூறு போட
முயன்று தோற்று, துள்ளிக்குதித்து
பிராணனை உறிஞ்சும் மீன்கள்.

ஆனந்த தாண்டவம்.

பூவையர்தம் பூக்களை களைந்து
பூநனைப்பைக்கண்டு வெட்கிக்
குனிந்து நின்ற மரங்கள்.

இன்ப தலையசைப்பு.

மீன்கொத்தி, நீருள் பாயும்
அழகின் இணையாய்
சிறார்களின் நீர் பாய்ச்சல்.

இளமைத் துள்ளல்.

உயிர் மீட்டுத்தந்த
மேகத்திற்கு நன்றி
பரப்பி தலையாட்டும்
நாணல்கள்.

சந்தோஷ தாலாட்டு.

சேர்த்து வைத்த உணவை
எல்லாம் வெளிக்கொணர்ந்து
திகைப்பில் ஆழ்த்தி
மலர்ந்த அல்லி.

அன்புச் சிரிப்பு.
இன்ப உலகம்தான்.

அல்லி கண்ட ஆதவன்
அடங்காக்கோபத்தில்
அள்ளிப்பருகி முடித்தான்
அலையாடிய குளநீரை.

இறைவனின் சேட்டை.

இனியென்ன அடுத்த பருவம்
நம்பிய நிலையில்லா வாழ்க்கை

No comments:

Post a Comment